Tuesday, July 16, 2013

கயமையிலும் கயமை அபத்தத்திலும் அபத்தம்…

பிள்ளைகளுக்கு  பிரதான தொடர்பு மொழியாக  தமிழ் இருக்கும் பட்சத்தில் பிற மொழிகள் குறிப்பாக ஆங்கிலம் சிறப்பாக ஆளுமைக்கு உட்பட்டு விடும் என்று நண்பர்களுடன் பல முறை விவாதித்து இணக்கம் கண்டு உள்ளேன். இது ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது நான் இன்னும் மாணவ பருவத்தை கடக்க வில்லை. நண்பர்களும் ஏறக்குறைய  அப்படித்தான். மொழியின் மேல் அன்பும் காதலும் கொண்ட ஒரு கட்டம்.

10 வருடங்களுக்கு பிறகு பல விடயங்களுக்கு மத்தியில் இந்த மைய கருவை அலசி பார்க்க ஒரு இரவு நேரம் கனிந்தது. பொருள் தேடி பணி  செய்து, தேய்ந்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில்தான் நண்பர்கள் பலரும் திருமணம் புரிந்து இருந்தனர். அதில் குறிப்பிட்ட ஒரு நண்பர் தனது மகளது முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார்.

இந்த நண்பரை எனக்கு ஏறத்தாழ 23 வருடங்களுக்கு மேலாகவே தெரியும். நல்ல தமிழ் குடும்பத்தில் பிறந்து தமிழ் வழி கல்வி கற்று தமிழ் மொழியை பிரதான மொழியாக கொண்டு வந்த ஒருவர். மகளுக்கு தேடி எடுத்து மிகவும் அருமையான நல்ல தமிழ் பெயரை சூடி இருந்தார். சொல்லும் போதே இனிக்கும் ஒரு பெயர். சொல்லி கேட்டு ரசித்து இருந்தேன்.


பின்பு நெருடலை உணர தொடங்கினேன்.

இன்னும் பேசஅறியாத அந்த குழந்தையிடம் மருந்துக்கு கூட தமிழ்   தராமல்  சீராட்டினார்கள். ஆங்கில மொழியிலே கொஞ்சுதலும் சீராட்டுதலும்  நடந்தேறி கொண்டிருந்தது .சற்று பதறினேன். தட்டி சொல்லும் அளவுக்கு உரிமை கொண்ட நண்பர், ஆகையால் சற்று கடிந்து கொள்ளும் தொனியில் தமிழுக்கும்  கொஞ்சம்  இடம் கொடுக்கலாமே என்று  சொன்னேன். அருமையான  நண்பர் என்பதால் அசடு வழிய கேட்டு கொண்டார்

இருப்பினும் இயல்பாகவே அவருக்கும்  குழந்தையை அணுகும் மற்றவர்களுக்கும் தமிழை தள்ளி வைத்தே இருந்தனர் .

இந்த சம்பவத்தை கடந்து அலசி பார்க்கும் பொழுது குழந்தைகளிடம் ஆங்கிலத்தை திணிப்பது  இளம் பெற்றோர்கள்  மத்தியில் எளிதாக காணப்படும் ஒரு "நாகரீக" பழக்கமாக இன்று காணப்படுகிறது. பிறந்தது முதல் இந்த இளம் பெற்றோர்கள்  மழலை மொழியாகவும்  கொஞ்சல் உரையாடல் மூலமாகவும் தம் குழந்தைகளிடம் இந்த திணிப்பை ஏற்படுத்துகிறார்கள்

இந்த மோகம் எதனால் ஏற்பட்டு இருக்கும்? வேற்று மொழயில் பிள்ளை கரை காண ஏற்பாடா? அல்லது  தம் சுய ஆணவத்தை விளம்பர படுத்தி கொள்ள இந்த குழந்தைகள் கருவிகள் ஆகின்றனவா?

என் பல கருத்துகளில் முதன்மையான கருத்து, இயற்கையோடு ஒட்டி வாழ்வதுதான் சரியான வாழ்வியலாக முடியும் என்பது அறுதியிறுதியான கருத்து ஆகும். இப்படி இருக்கையில் தமிழ் மரபில் பிறக்கும் குழந்தைக்கு அதனுடைய டீன்எ-இல் இயற்கையாக பதிந்து இருக்கும் தமிழை புகட்டுவதுதானே இயற்கையான வாழ்வியலாக இருக்க முடியும்?. அதோடு  பிறக்கும் அந்த குழந்தைக்கு உரியவர்கள் அந்த பெற்றவர்கள் மட்டும் அல்ல, அதன் மூதாதையர்களும் தானே? அப்படி இருக்கையில் அந்த இயற்கையான தொடர்பை அறுத்து எறிவது அந்த குழந்தையின் உரிமைக்கு செய்யும் ஒரு துரோக செயல்  தானே?

அந்த நண்பர் சொன்னே ஒரு ஆறுதல் " சின்ன வயசுலே ஆரபிச்சாதனே?".

எனக்கு மௌனத்திலே தோன்றியது கயமையிலும் கயமை அபத்தத்திலும் அபத்தம்


-வேல் முரளி-